காஞ்சிவரம்

இன்று(30.08.2014) பொதிகை டி.வியில் காஞ்சிவரம் படம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.



இந்தப்படம் காஞ்சிவரத்திலுள்ளள நெசவாளிகளைபப் பற்றியது. கதை முழுக்க வேங்கடம் என்கிற பிணயக் கைதியின் மழைநேர வண்டிப்பயணத்தின் நினைவலைகளாகவே சொல்லப்பட்டிருக்கிறது.வேங்கடம் என்கிற பிரகாஸ்ராஜ் பட்டுடுத்தித்தான் தன் மனைவியைத் திருமணம் செய்வேன் என்று ஊரெல்லாம் சொல்லி வைத்துவிட்டு நூல் சேலையுடன் அன்னம் என்கிற ஸ்ரேயா ரெட்டியை மணந்து ஊருக்குக் கூட்டிவருகிறார். திமிருல வந்த தில்லானாவா இந்த ஸ்ரேயா என்றளவுக்கு அப்பிடி சாந்தமா இருக்கிறா அன்னம். தன் வாழ்நாள் முழுதும் பல பட்டுச்சேலைகளை நெய்த பிரகாஸ்ராஜின் தந்தை இறந்தபோது அவருடைய உடம்பைப் போர்த்துவிட ஒரு பட்டுத்துணியில்லாமல் ஒரு பட்டு நூலால் அவருடைய பெருவிரல்கள் கட்டப்படுவதன் மூலம் ஒரு நெசவாளியின் நிலமை சொல்லப்படுகிறது.அவர்களுக்கு பட்டை நெசவு செய்யத்தான் முடியும் அதை உடுத்தி அழகு பார்க்கும் வல்லமையில்லை.

ஒரு சேலையை நெசவு செய்வது முதல் அந்தச் சேலையின் நிறங்கள் அதில் வரும் டிசைன் எல்லாமே அந்த நெசவாளியின் சொந்தக் கற்பனை அல்லது படைப்பு. ஆனால் அந்தச்சேலையை பலநூறு ரூபாய்களுக்கு விற்றுச் சம்பாதிப்பது அங்கேயுள்ள முதலாளிகள். ஒரு சேலை நெசவு செய்ய 3-4 ரூபாய்கள்தான் கூலி. அப்படிச் சம்பாதிப்பதில் அவர்கள் வாழ்நாள் முழுக்கச் சேமித்தால்தான் ஒரு நெசவாளியால் ஒரு பட்டுச்சேலையை வாங்க முடியும். அப்படி தனக்கு வரப்போகும் மனைவிக்கு பட்டுச்சேலை வாங்கவென்று வெங்கடம் காசு சேர்க்கிறார் ஆனால் அது போதவில்லை அதற்குள் கல்யாணமும் நடந்துவிட்டது.

ஒருநாள் வேங்கடத்தின் முதலாளியின் மகளுக்கு திருமணம் நிச்சயமாகிறது. முதலாளி வேங்கடத்தையழைத்து நீதான் மிகத்திறமை சாலியாம் என் மகளுடைய திருமணப்புடைவையை நீதான் நெய்ய வேண்டும் என்கிறார். அந்தச்சேலையை வெள்ளைக்கார துரை முதல் அனைவரும் புகழ்ந்து தள்ள முதலாளி வேங்கடத்து போனஸ் எல்லாம் குடுக்கிறார். சந்தோசத்தில் வேங்கடம் அன்னத்திடம் அந்தச் சேலையைப் பற்றி வர்ணிக்க அன்னம் அந்தச் சேலையைத் தான் பார்க்கவேண்டும் என்கிறாள்.பட்டு நூலைத் திருடுகிறார்களோ என்ற சந்தேகத்தில் முதலாளியின் கட்டளைப்படி கோயிலில் வைத்துத்தான் பட்டுச்சேலைகள் உருவாக்கப்படுகின்றன அதனால் காஞ்சிவர நெசவாளிகளின் மனைவியருக்கு பட்டுச்சீலையை உடுத்துவது மட்டுமில்லை அதைக்கண்ணால் பார்ப்பதே பெரிய விசயம்.

இந்தச்சந்தர்ப்பத்தில் வேங்கடத்துக்கு ஒரு பெண்குழந்தை பிறக்கிறது.குழந்தையின் வரவைக்கொண்டாட ஏற்பாடு செய்யபட்ட விழாவில் அவர்களின் வழக்கப்படி தந்தை தன் மகளின் காதில் ஒரு வாக்குறுதி சொல்லவேண்டும். வேங்கடம் தன் மகளின் காதில் " நீ வளர்ந்து பெரிய மனுசி ஆனதும் உன்னைப் பட்டுச்சேலை கட்டித்தான் புருசன் வீட்டுக்கு அனுப்பி வைப்பன் இது சத்தியம் " என்று சொல்கிறார். "முதல்ல பொண்டாட்டிக்கு பட்டுச்சீலையெண்டான் இப்ப மகளுக்கு ஏனிந்தப் பேராசை "என்று முணுமுணுப்பார்கள் வந்திருந்தவர்கள்.எம்.ஜி.ஸ்ரீகுமார் என்ற இசையமைப்பாளருக்கு இதுதான் முதல்படமாம். " பொன்னூஞ்சல் தொட்டிலேலே மயிலிறகு மெத்தையிலே மானே நீ உறங்கு உறங்கு ...ஆராரொ ஆரிரரோ "என்றொரு பாடல் வருகிறது. திரும்ப திரும்ப கேக்கோணும் போல இருந்திச்சு ஆனால் படத்தின் முடிவிலயும் அந்தப் பாடலைப் போட்டு நிறைய பேரை அழ வைத்துவிட்டார் இயக்குனர்.

ஊருக்கு முதல்முதலாக வரும் மோட்டார்வண்டியைப் பார்க்க அம்பலோதிப்படும் சனத்திரளில் மிதிபட்டு நோய்வாய்ப்படுகிறார் அன்னம்.தன் மகளுக்குக் குடுத்த வாக்குறுதியைக் கணவரால் காப்பாத்த முடியாதென்கிற கவலையில் வாடும் மனைவியயைத் தூக்கிச்சென்று தான் இரகசியமாகத் திருடிவரும் பட்டுநூல்களைக் கொண்டு தான் நெய்துவரும் பட்டுச்சீலையைக் காட்டி அன்னத்தை நிம்மதியாகச் சாகவிடுகிறார்.



மகளாக வரும் அந்த ஓட்டைப்பல்லிக் குட்டிப்பொண்ணும் சரி வளர்ந்த மகளாக நடித்த ஷம்முவும் சரி நன்றாக நடித்திருக்கிறார்கள். ஷம்முவுக்கு இது முதல் படமாம்.மகளுக்குத்தான் குடுத்த வாக்குறுதியைக் காப்பாத்த ஒரு பொதுவுடைமை வாதியான வேங்கடம் ஒரு திருடனாக சுயநலக்காரனாகிறார். சாரதி என்கிற ஒரு எழுத்தாளர் காஞ்சிவரத்துக்கு வந்து தன் பொதுவுடைமைக் கருத்துகளையும் புத்தகங்களையும் வேங்கடத்துக்கும் அவருடைய நண்பருக்கு வழங்கிவிட்டு சுடுபட்டு செத்துப்போக அவருடைய கருத்துக்களை ஏனைய நெசவாளிகளுக்குச் சொல்லி தாங்கள் எவ்வாறு முதலாளிகளால் சுரண்டப்படுகிறோம் என்று விளக்கி ஒரு அமைப்பைக் கட்டியெழுப்பும் வேங்கடம் கோரிக்கை வைத்தல் வேலைநிறுத்தம் இப்படியெல்லாம் செய்கிறார். இறுதியில் தன்மகளின் திருமணத்துக்காக பட்டுச்சேலை தயாராகவேணும் அதற்கு தான் பட்டுநூல் திருடியாகவேண்டும் அதற்கு தொடர்ந்து வேலை நடக்கவேண்டும் என்பதற்காக தோழர்கள் வேலை நிறுத்தத்தைக் கைவிடவேண்டும். தோழர்களிடம் அவர்களைக் குழப்வுதற்காகவே மிகத்தெளிவாக ஒரு பிரச்சாரம் செய்வார் அந்தநேரம் அரங்கு முழுக்கச் சிரிப்புத்தான்.எல்லா மனிதருக்குள்ளயும் ஒரு சுயநலவாதி ஒளிந்திருக்கிறான் என்றதுண்மைதான்.

வேங்கடத்துக்கு ஒரு தங்கையிருக்கிறார். என்னைப்பொறுத்தவரைக்கும் அவர்தான் வில்லி. அவாவும் அவான்ர கணவரும் சேர்ந்து அழுது வடிச்சு வேங்கடம் தன் மகளுக்கு பட்டு வாங்க சேர்த்த காசைச் சுருட்டாமல் விட்டிருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்.

எல்லாம் சொல்லிட்டன் மிச்சக்கதையும் சொல்லலாம் போலத்தானிருக்கு ஆனால் பிறகு நீங்களொருதரும் படம் பார்க்காமல் விட்டிட்டால் அது எவ்வளவு பெரிய நட்டம்..ம் அதால வேங்கடத்தின் மகளுக்குத் திருமணம் நடந்ததா ? பட்டுச்சேலை கட்டும் அதிஷ்டம் அவளுக்கு வாய்த்ததா என்று படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

இந்தப்படம் பார்த்தவர்களிடம் ஒரு கேள்வி :
வேங்கடம் தன் மனைவி சாகும் தறுவாயில் தங்கள் மகளுக்காக தான் நெய்துகொண்டிருப்பதாக காட்டுவது ஒரு அழகான பச்சையும் சிவப்புமான சேலை ஆனால் கடைசிக்காட்சியல் காட்டப்பட்டது வேறு ஒரு சேலை மாதிரி எனக்குப் பட்டது...யாரும் கவனித்தீர்களா?

ஒரு படத்தின் வெற்றி அந்தப்படம் என்ன எண்ணங்களை எங்களிடம் விட்டுச்செல்கிறது என்பதைப் பொறுத்தது உண்மையெனில் நாங்கள் இந்தப்படம் பற்றியும் அதில் வரும் கதாபாத்திரங்களும் அவர்கள் பேசும் வசனங்களைப் பற்றியும் கதைத்துக்கொண்டு நாங்கள் இறங்க வேண்டிய நிறுத்தத்தையும் தாண்டி ரெயின் போறதைப் கவனிக்காமல் பேசிக்கொண்டிருந்தோம் என்பதைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

ஒரு பொலிஸ் அதிகாரியொருவரின் தொப்பியிலுள்ள பிரிட்டிஸ் சின்னம்(?) கழன்று விழுந்துவிடும் அதை தைப்பதற்காக அந்த அதிகாரி ரொம்பக் கஸ்டப்படுவார்.பேருந்தை மறித்து ஒரு தையற்கடையில் போய் கனநேரமா உக்காந்திருப்பார். பொறுமையிழந்த பயணிகள் இப்ப அந்தச் சின்னம் இல்லாட்ட என்ன என்று சினக்க மற்றொரு அதிகாரி சொல்லுவார் அந்தச் சின்னமில்லாட்டா வேலை போயிடும் அப்ப மற்றொராள் கேப்பார் "ஏன் அப்பிடி" பொலிஸ் அதிகாரி சொல்லுவார் பிரிட்டிஸ் காரன் வச்சிட்டுப் போன சட்டம் ஏன் எதுக்கெண்டே தெரியாமல் நாங்கள் பின்பற்றுறம்" இப்பிடியான வசனங்களுக்கோ கதையினூடு இழையோடும் மெல்லிய நகைச்சுவைகளுக்கும் பஞ்சமில்லை.

முதல்லயே கேக்கணும் என்று நினைச்சன்...எல்லாரும் நல்லா இருக்கிறீங்கிளா